tamilnadu

img

5 ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து நவம்பர் 26 அன்று முடிவு

லக்னோ:
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில், ராமர் கோவில் கட்டிக் கொள்வதற்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வானது, முஸ்லிம்களின் மசூதிக்கு, தனியாக வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.ஆனால், இந்த நிலத்தை ஏற்பது தொடர்பாக வக்பு வாரியம் உறுதியான முடிவு எதையும் எடுக்கவில்லை. அதுதொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், 5 ஏக்கர் நிலத்தைப் பெறலாமா, வேண்டாமா? என்பது குறித்து விரிவாக விவாதிப்பதற்காக வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் நவம்பர் 26-ஆம் தேதி நடைபெறும் என அதன் தலைவர் ஜூபர் பரூக்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பரூக்கி மேலும் கூறியிருப்பதாவது:அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இதை எதிர்த்து மறு ஆய்வு செய்வது தொடர்பான எந்த திட்டமும் இல்லை. ஆனால், தீர்ப்பின்படி மசூதி கட்டுவதற்கு வழங்கப்படும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது தொடர்பாக எனக்கு பலதரப்பட்ட பரிந்துரைகள் வருகின்றன. குறிப்பாக மசூதி கட்டுவதற்காக இந்த நிலத்தை வாங்கக்கூடாது என பலர் தெரிவிக்கின்றனர். இது எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் என நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, தனைக்குள்ளாக்கி இருக்கும் இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரவும், எதிர்மறை எண்ணங்களை தடுக்கவும் நேர்மறையான அணுகுமுறையே வேண்டும் என கருதுகிறேன்.அதேநேரம் அரசு வழங்கும் நிலத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஒருசிலர் கூறுகின்றனர். அந்த நிலத்தில் மசூதியுடன் சேர்த்து கல்வி நிறுவனம் ஒன்றையும் கட்ட வேண்டும் என அவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் நிலம் வழங்குவதை பொறுத்தவரை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிதான் அரசு நடந்து கொள்ளும்.

எனவே மசூதி கட்டுவதற்காக வழங்கப்படும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து பொதுக்குழுவில் கூட்டத்தில் பேசி முடிவு செய்வோம். இந்த கூட்டம் 13-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது 26-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அன்றைய கூட்டத்தில் நாங்கள் இது குறித்து முடிவு செய்வோம்.இந்த நிலத்தை ஏற்பது என்று பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்தால், அதை எப்படி பெறுவது? அதற்கான நிபந்தனைகள் குறித்தும் பேசி முடிவு செய்வோம். இவ்வாறு ஜூபர் பரூக்கி தெரிவித்துள்ளார்.

;